“திமுக திட்டங்களை காப்பி, பேஸ்ட் செய்கிறார் எடப்பாடி”: பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகளால் பின்னடைவு இல்லை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குறுதிகள் குறித்து, தமிழக மாநில இயற்கை வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான பதிலடி கொடுத்தார். பொதுவாகத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடுவது வழக்கம்; ஆனால் எடப்பாடி பழனிசாமி ‘பந்திக்கு முந்துவதைப் போல’ அவசர அவசரமாகத் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார் என்று அவர் விமர்சித்தார். “பந்தியே இன்னும் போடாத நிலையில் எடப்பாடி பழனிசாமி அங்கே முந்திக்கொண்டு சென்று காத்திருக்க வேண்டியதுதான்; பந்தி போட்ட பிறகு நாங்கள் வந்து நிதானமாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்வோம்” என நகைச்சுவையுடன் கூடிய அரசியல் விமர்சனத்தை அவர் முன்வைத்தார்.

திமுகவின் தற்போதைய மக்கள் நலத் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி ‘காப்பி, பேஸ்ட்’ செய்திருப்பதாகச் சாடிய அமைச்சர் ரகுபதி, கடந்த தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று கூறிய அதே பழனிசாமி, தற்போது அதனை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம் என அறிவித்திருப்பதே திமுக ஆட்சியின் வெற்றிக்குச் சான்று என்று குறிப்பிட்டார். மகளிரிடையே திமுக அரசு கொண்டு வந்துள்ள உரிமைத் தொகை திட்டம் அடைந்துள்ள மாபெரும் வரவேற்பைக் கண்டே, அதிமுக இந்தத் திட்டத்தை இப்போது கையில் எடுத்துள்ளது என்றார். இந்தத் தொகையை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என்றும், அதிமுகவின் இந்த அறிவிப்புகளால் திமுக கூட்டணிக்கு எவ்வித பின்னடைவும் ஏற்படாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், காங்கிரஸ் கட்சியுடன் திமுக சுமுகமான உறவிலேயே நீடிப்பதாகவும், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலேயே தொடரும் என்பதில் தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். “நாங்கள் கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்பவர்களே ஒழிய, ஒருபோதும் அனுப்பி வைக்க மாட்டோம்” என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் என்று டிடிவி தினகரன் கூறிய கருத்துக்குப் பதிலளித்த அவர், “டிடிவி தினகரனுக்கு அரசியல் தெரியாது, வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சிக்குத் தமிழகத்தில் எவ்வித வாய்ப்பும் இல்லை; திமுக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும்” என்று உறுதிபடத் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் நிதி மேலாண்மைத் திறனை மக்கள் ஏற்கனவே பார்த்துவிட்டனர் என்றும், அவரால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது என்றும் தனது பேட்டியில் அமைச்சர் ரகுபதி கடுமையாகச் சாடினார்.

Exit mobile version