ஈக்வடார் சிறையில் மோதல் : 31 கைதிகள் உயிரிழப்பு

குயட்டோ : தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் குறைந்தது 31 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

மச்சாலா நகரில் அமைந்துள்ள சிறையில், இரு கைதி கும்பல்களுக்கு இடையே கடுமையான தகராறு வெடித்தது. இதன் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதோடு, கையெறி குண்டுகளும் வீசப்பட்டன. திடீரென ஏற்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், சிலர் மூச்சுத் திணறி பலியானதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி சில கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சிறை வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஈக்வடாரில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் குற்றச்செயல் கும்பல்களால் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதன் தாக்கம் சிறைகளிலும் அதிகரித்துள்ளது.

செப்டம்பரில் நடந்த முந்தைய கலவரத்தில் 14 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர். தற்போதைய சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி டேனியல் நோபோவா உறுதி அளித்துள்ளார்.

Exit mobile version