துபாய் வேலைவாய்ப்பு மோசடி உணவின்றித் தவித்த கள்ளக்குறிச்சி இளைஞர்கள் மீட்பு

வெளிநாட்டில் வேலை பார்த்துத் தங்கள் குடும்பத்தின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற கனவோடு சென்று, அங்கு ஏஜென்டால் ஏமாற்றப்பட்டு உணவின்றித் தவித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9 இளைஞர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிரடித் தலையீட்டால் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர். மேலும், அவர்களை ஏமாற்றிப் பணம் பறித்த ஏஜென்டிடமிருந்து முதற்கட்டமாகப் பணமும் பெற்றுத் தரப்பட்டுள்ளது அந்தப் பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த புகைப்பட்டி மற்றும் எல்லை கிராமங்களைச் சேர்ந்த செல்வகுமார், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 9 இளைஞர்களுக்கு, எலவனாசூர் கோட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்ற ஏஜென்ட் வெளிநாட்டு வேலை ஆசை காட்டியுள்ளார். துபாயில் மாதம் 36,000 ரூபாய் சம்பளத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த நவம்பர் மாதம் அவர்களை அழைத்துச் சென்றுள்ளார். இதற்காக ஒவ்வொரு இளைஞரிடமிருந்தும் தலா 1,10,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால், துபாய் சென்றடைந்த இளைஞர்களுக்கு அங்கு வேலை எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக, அவர்களின் பாஸ்போர்ட்டுகளும் பறிக்கப்பட்டு, ஒரு சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டனர். சுமார் 20 நாட்களுக்கும் மேலாக வேலை மற்றும் முறையான உணவின்றி அந்த இளைஞர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகினர். தங்களின் நிலை குறித்து ஊரிலுள்ள குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை நாடினர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி சிபிஎம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளரிடம் (DSP) புகார் அளிக்கப்பட்டது. கட்சியின் தொடர் அழுத்தத்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையாலும் துபாயில் தவித்த இளைஞர்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன் மீட்கப்பட்டுச் சொந்த ஊர் திரும்பினர்.

இதற்கிடையே, இளைஞர்களிடம் ஏஜென்ட் வாங்கிய பணத்தை மீட்டெடுக்கவும் கட்சித் தலைமை முயற்சி மேற்கொண்டது. பயணச் செலவுகள் போக மீதித் தொகையான 70,000 ரூபாயை ஏஜென்ட் ஆனந்த் திருப்பித் தர ஒப்புக்கொண்டார். அதன்படி, முதற்கட்டமாக இன்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இளைஞரிடமும் தலா 35,000 ரூபாய் ரொக்கம் ஒப்படைக்கப்பட்டது. இக்கட்டான சூழலில் தங்களின் பிள்ளைகளை மீட்டதோடு, பணத்தையும் மீட்டுத் தந்த சிபிஎம் ஒன்றிய செயலாளர் வி. ரகுராமன் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுக்குப் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். வெளிநாடு செல்லும் இளைஞர்கள் முறையான அங்கீகாரம் பெற்ற ஏஜென்ட்டுகள் வழியாகச் செல்ல வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version