நீலகிரி மாவட்டம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், தமிழக அரசின் “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் ஒரு பகுதியாக, “கனவுகள் மெய்ப்படும்” என்ற உன்னத நோக்கில் பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நடைபெற்ற இந்த எழுச்சிமிகு விழாவில், அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் கலந்துகொண்டு, மொத்தம் 174 பயனாளிகளுக்கு ரூ. 20.98 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பித்தார். சென்னையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான நிறைவு விழாவைத் தொடர்ந்து, மலை மாவட்டமான நீலகிரியிலும் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவின் முக்கிய அங்கமாக, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 171 பயனாளிகளுக்கு ரூ. 20.94 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்பு ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 4.85 லட்சம் மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், “மக்களின் எதிர்காலக் கனவுகளைக் கேட்டு, அதற்கேற்ப திட்டங்களை வடிவமைக்கவே ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் சுமார் 1.92 கோடி மக்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். மேலும், மாநிலத்தின் வனப்பரப்பை 24 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்தப் பசுமைப் புரட்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிட்டார்.
விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, மகளிர் திட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா அனைவரையும் கவர்ந்தது. இதில் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தினர்; சிறப்பாகப் பங்கேற்ற குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட “ஐந்தாண்டு சாதனை” புத்தகம் மற்றும் “நீலகிரி மாவட்ட பார்வை ஆவணம் 2030” (Nilgiris District Vision Document 2030) ஆகிய முக்கிய ஆவணங்களை ஆட்சியர் முன்னிலையில் அரசு தலைமை கொறடா வெளியிட்டார்.
இந்நிகழ்வில் உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கௌர், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் உதகை நகர்மன்றத் தலைவர் வாணீஸ்வரி, கூடலூர் நகர்மன்றத் தலைவர் பரிமளம், குன்னூர் நகர்மன்றத் தலைவர் சுசீலா, உதகை நகர்மன்றத் துணைத்தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
