திருப்பூர் கலெக்டராக இருந்த கிறிஸ்துராஜ் சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜீக்கு பிரிவு உபச்சார விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் செய்த பணிகள் குறித்து பாராட்டி பேசினர். இதில் தாராபுரம், அம்மாபட்டி பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த வசந்தா என்ற பெண்மணி பேசும்போது, வீடுகளின்றி சாலையோரம் தங்கியிருந்த 40 குடும்பங்களை சேர்ந்த தங்கள் இன மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பணிகளை துவக்கி, அனைத்து வீடுகளுக்கும் தனது சொந்த செலவிலேயே டைல்ஸ் அமைத்து கொடுத்த கலெக்டர் கிறிஸ்துராஜீக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நரிக்குறவ இன பெண்மணிகள் தங்களது கைகளால் உருவாக்கிய பாசிமணி மாலையை கலெகடருக்கு அணிவித்து மகிழ்ந்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வு அங்கிருந்த அனைவர் மனதையும் நெகிழச் செய்தது. தொடர்ந்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கலெக்டருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசுகளை வழங்கினர்.