கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் அமைந்துள்ள ஆன்மீகப் புகழ்பெற்ற குமரன் குன்று அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் பக்திப் பெருக்குடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மலைமேல் குடிகொண்டுள்ள முருகப்பெருமானை வழிபட மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்தனர். விழாவை முன்னிட்டு கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க வள்ளி-தெய்வானை சமேதராக சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார்.
இந்தச் சிறப்பான தேரோட்ட வைபவத்தைக் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தொண்டாமுத்தூர் ரவி மற்றும் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என எழுப்பிய பக்தி முழக்கம் விண்ணைப் பிளந்தது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.
இந்நிகழ்வில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்குப் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். குமரன் குன்று மலைக்கோவிலில் நடைபெற்ற இந்த ஆன்மீகப் பெருவிழா அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பக்தி உணர்வையும் ஏற்படுத்தியது.

















