கோவைக்கு அதிநவீன ஹாக்கி மைதானம் தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தின் தொழில் நகரமான கோயம்புத்தூரின் உட்கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் வகையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார். ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில், ரூ.162.62 கோடி மதிப்பிலான 107 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்த அவர், ரூ.31.72 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 10,626 பயனாளிகளுக்கு ரூ.136.44 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார். ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.331 கோடி மதிப்பிலான திட்டங்களால் கோவை மாவட்டம் இன்று புத்தாண்டு பொலிவைப் பெற்றுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் உதயநிதி ஸ்டாலின், கோவை மாவட்ட விளையாட்டு வீரர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த அதிநவீன செயற்கை இழை ஹாக்கி மைதானத்தைத் திறந்து வைத்தார். “கோவைக்கு இது ஒரு புத்தாண்டுப் பரிசு; இனி சர்வதேச அளவிலான ஹாக்கிப் போட்டிகள் கோவையிலும் நடைபெறும்” என்று அவர் உறுதியளித்தார். அதேபோல், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சிங்காநல்லூர் – ஒண்டிபுதூர் பகுதியில் ரூ.56 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட ரயில்வே மேம்பாலத்தையும் அவர் திறந்து வைத்தார். இதன் மூலம் நாளொன்றுக்கு 42 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் உரையாற்றிய துணை முதல்வர், கோவை மீது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் எப்போதும் ஒரு தனிப்பாசம் உண்டு என்று குறிப்பிட்டார். திராவிட மாடல் ஆட்சியின் சமூக நலத்திட்டங்களான ‘விடியல் பயணம்’, ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’, ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ ஆகியவற்றின் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருவதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழகம் 11.19 சதவீதப் பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகவும், தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் கோவைக்கு மட்டும் ரூ.7,100 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்த விழாவில் 1,500 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், 1,500 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ப. ராஜ்குமார், க. ஈஸ்வரசாமி, கே.இ. பிரகாஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், மாநகராட்சி மேயர் கா. ரங்கநாயகி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்ற இந்த விழா, கோவையின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

Exit mobile version