‘திமுக ஆட்சியில் கரைபிடித்த ஊழல்’ – டாக்டர் பா. சரவணன் குற்றச்சாட்டு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதிமுகவின் 82 நிர்வாக மாவட்டங்களிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிமுகவின் மருத்துவ அணி சார்பில் மதுரையில் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன், மதுரை முனிச்சாலை, பந்தல்குடி, செல்லூர் ஆகிய பகுதிகளில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பின்னர், மதுரை கே.கே. நகரில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், டாக்டர் பா. சரவணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவின் ஆட்சிச் சிறப்புகளை நினைவு கூர்ந்த டாக்டர் பா. சரவணன், அவர் இந்தியாவே உற்றுநோக்கும் வகையில் திட்டங்களை வழங்கியதாகத் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் லட்சியத்தைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு கடுமையாகக் களப்பணி ஆற்றிவரும் எடப்பாடியார், இன்றைக்கு திமுகவிற்குச் சிம்மசொப்பனமாக உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய திமுக ஆட்சி குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த டாக்டர் பா. சரவணன், தமிழகம் ஊழலால் சீரழிந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

‘கமிஷன், கரப்ஷன், கலெக்சன்’: “தமிழ்நாடு இன்றைக்கு ஸ்டாலின் திமுக ஆட்சியில் கரைபிடித்த ஆட்சியாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ‘கமிஷன், கரப்ஷன், கலெக்சன்’ ஆக உள்ளது,” என்று அவர் குற்றம் சாட்டினார். வாக்குறுதி ஏமாற்றம்: திமுக அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றி மக்களை ஏமாற்றியுள்ளது என்றும் தெரிவித்தார்.

பஞ்சபூதங்களிலும் ஊழல்: “திமுக அரசு பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்து வருகிறது. சென்னையில் மழைநீர் வடிகால் பணியில் ரூ. 5,000 கோடி ஊழல், மணலில் ரூ. 4,000 கோடி முறைகேடு செய்தது மட்டுமல்லாமல், அனுமதி இல்லாமல் மண் அள்ளப்பட்டு வருகிறது,” என்று அவர் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார். தமிழகத்தின் எதிர்காலம் குறித்துப் பேசிய டாக்டர் பா. சரவணன், மீண்டும் அதிமுக ஆட்சி மலர சூளுரைத்தார்.

“மீண்டும் தமிழ்நாட்டில் ஒளிமயமான எதிர்காலம் உருவாகவும், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகம் வரவும், எடப்பாடியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார். “வருகின்ற 2026 தேர்தலில் மீண்டும் தமிழ்நாட்டில் எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சி மலர, ஜெயலலிதாவின் 9வது நினைவு நாளில் நாம் சூளுரை ஏற்க வேண்டும். அடுத்த ஆண்டு வரும் பத்தாவது ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாட்டில் எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்திருக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version