புதுடில்லி : நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7000 ஐ நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 324 பேர் புதியதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அண்மையில் டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் தினசரி பதிவாகும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டிலிருக்கும் மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 6815 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேரளா மாநிலம் மிக அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அங்கு மட்டும் 2053 பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 96 பேர் புதிய தொற்றாளர்கள் ஆகும்.
இதற்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் பாதிப்பு உள்ள மாநிலங்கள் :
குஜராத் – 1109 பேர், மேற்கு வங்கம் – 747 பேர்,டில்லி – 691 பேர், மஹாராஷ்டிரா – 613 பேர், கர்நாடகா – 559 பேர்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டில்லி, கேரளா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் வீதம் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் ஆண்கள், ஒருவர் பெண். இவர்கள் மூவரும் இணைநோய்கள் (comorbidities) கொண்டிருந்தவர்கள் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் முகமூடி அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமாகவே இந்த தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.