மத்திய பாஜக அரசின் திடீர் சமையல் எரிவாயு விலை உயர்வு, ஏற்கனவே விலைவாசி உயர்வால் தத்தளித்து வரும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே அடியாக 60 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது சாமானிய மக்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது போன்றது எனச் சாடியுள்ளார். சர்வதேச கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்திற்காக இந்திய உழைப்பாளி மக்களின் தலையில் கூடுதல் சுமையைச் சுமத்தும் மோடி அரசின் இந்தப் போக்கு, வரும் காலங்களில் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த தருணங்களில் கூட, அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை உயர்த்தியே வந்த மத்திய அரசு, தற்போது ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் போரைக் காரணம் காட்டி விலையை உயர்த்துவது அநியாயமானது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனச் சில நாட்களுக்கு முன்பு வரை கூறிவந்த பாஜக ஆட்சியாளர்கள், இப்போது 60 ரூபாயை உயர்த்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க வெறியைக் கண்டிக்கத் தவறிய மோடி அரசு, இந்தியாவின் இறையாண்மைக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” எனப் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த எரிவாயு விலை உயர்வு என்பது வெறும் சிலிண்டருடன் நிற்கப்போவதில்லை என்றும், இது சங்கிலித் தொடராக அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையையும் பல மடங்கு உயர்த்தும் ஆபத்து இருப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவலை தெரிவித்துள்ளது. ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த அனுமதியைத் தங்களது சாதனையாகப் பறைசாற்றும் சங்பரிவார் அமைப்புகள், உண்மையில் அமெரிக்காவிற்குத்தான் விசுவாசமாக இருக்கின்றன என்பது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. எனவே, இந்த மக்கள் விரோத விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், போருக்கு எதிராகவும் விலை உயர்வுக்கு எதிராகவும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
