நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : கேள்விகளுக்கு மத்தியில் அமர்வை விட்டு வெளியேறிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

மதுரை:
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, எழுந்த கேள்விகளால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கோபத்துடன் திடீரென அமர்வை விட்டு எழுந்து தனது அறைக்குள் சென்றதால், நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றது.

விசாரணைக்கு மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலர் காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் பங்கேற்றார். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து நீதிபதி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் புறக்கணித்தால், சட்டத்தின் ஆட்சி என்ற அடிப்படை கோட்பாடே கேள்விக்குறியாகும்” எனக் குறிப்பிட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தங்களது நிலைப்பாட்டை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

விசாரணையின் போது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து தலைமைச் செயலர் விளக்கம் அளித்தார். இதற்கு பதிலளித்த நீதிபதி, “சட்ட ஒழுங்கு காரணங்களை முன்வைத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது எந்த வகையான நடைமுறை?” என கேள்வி எழுப்பினார்.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், நீதிபதி தொடர்பாக முன்வைத்த ஒரு கருத்து குறித்து, நீதிபதி சுவாமிநாதன் கடும் எதிர்வினை தெரிவித்தார். இதையடுத்து, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் அமர்வை விட்டு திடீரென வெளியேறினார். இந்த நிகழ்வு நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version