மத்திய கிழக்கு பகுதி தற்போது பெரும் பதட்டத்தைக் காண்கிறது. அணு ஆயுத விவகாரம் காரணமாக ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஒருவருக்கொருவர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சிக்கலான சூழ்நிலையிலேயே, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டதாக சிக்கலான குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
ஈரானின் அணு திட்டம் – இஸ்ரேலின் கவலை
இஸ்ரேல் தொடர்ச்சியாக ஈரானை தனது பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாகக் காண்கிறது. அணு ஆயுதங்கள் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறி, சமீபத்தில் பலவீன பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரானும் பல்வேறு தளங்களில் இஸ்ரேலை நோக்கி தாக்குதல்களில் ஈடுபட்டது. இதனால் இரு நாடுகளும் நேரடியாகப் போர்மூட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ட்ரம்ப் மீது சதி திட்டம் ?
இந்நிலையில், ட்ரம்ப் சமீபத்தில் அமெரிக்க உள்ளூர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஈரான், தங்களது அணு திட்டத்திற்கு மிகப்பெரிய தடையாக நான் இருப்பதாக கருதி, என்னை கொல்ல சதி திட்டம் வகுத்துள்ளது” என அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். “ஈரான் உளவுத்துறை எனக்கு எதிராக சதி செய்கிறது” என்றும் அவர் கூறினார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் கருத்து வெளியிட்டு, “ஈரான் உலகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதைத் தடுக்க தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயார்” எனத் தெரிவித்தார். இவரது மகன் அவ்னெர் நெதன்யாகுவின் திருமணத்தை கூட தற்போது பிற்போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்–ஈரான் மோதலில் பாகிஸ்தான் நிழல் ?
இந்த மோதலில் பாகிஸ்தானின் பெயரும் தற்பொழுது வெளிவந்துள்ளது. “இஸ்ரேல், ஈரான் மீது அணு ஆயுதம் பயன்படுத்தினால், அதற்கு பதிலடி அளிக்க பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்தும்” என IRGC மூத்த அதிகாரி ஜெனரல் மொஹ்சென் ரெசாய் கூறியுள்ளார். ஆனால் இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கம் எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்பாடும் வழங்கவில்லை.
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு குறைவு
இருபுறத் தாக்குதல்கள் தீவிரமாகியிருக்கும் நிலையில், சமாதான பேச்சுவார்த்தை தற்போது சாத்தியமற்ற நிலைமைக்கு செல்வதாகத் தெரிகிறது. ஈரான், இஸ்ரேலின் தாக்குதலுக்கு தக்க பதிலடி அளித்த பிறகே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என கத்தார், ஓமன் நாடுகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.