கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டுகளில் சுமார் ரூ.5.64 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பி.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், ரூ.3.39 கோடி மதிப்பீட்டில் நிறைவுற்ற 6 முக்கியப் பணிகள் திறந்து வைக்கப்பட்டதோடு, ரூ.2.25 கோடி மதிப்பிலான 3 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் கோவை மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி கமிஷனர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில், வார்டு எண் 14-க்கு உட்பட்ட வள்ளக்கிணறு உழைப்பாளர் வீதியில் தூய்மை இந்தியா (2.0) திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பொதுக் கழிப்பிடம் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீனாட்சி நகர் – அமர்ஜோதி நகர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.44 லட்சம் செலவில் ராஜவாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலம் மற்றும் வார்டு எண் 4-க்கு உட்பட்ட சரவணம்பட்டி விஸ்வாசபுரத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை ஆகியவற்றை எம்பி கணபதி பி.ராஜ்குமார் திறந்து வைத்தார். கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வார்டு எண் 26 பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அதிநவீன யூ.எஸ்.எஸ்.டி (USSD) ஆய்வகமும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. இதேபோல மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ரங்கநாதபுரம் மற்றும் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளிலும் தலா ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆய்வகக் கட்டிடங்கள் மாணவிகளின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டன.
புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், மத்திய மண்டலம் வார்டு எண் 48 ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பராமரிப்பு மற்றும் கால்வாய் தடுப்புச்சுவர் பணிகளும், வார்டு எண் 83-க்கு உட்பட்ட வ.உ.சி. பூங்கா வளாகத்தில் ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் நீச்சல் குளத்திற்கான அடிப்படை வசதிகள் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளும் தொடங்கப்பட்டன. இப்பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இணைந்து அடிக்கல் நாட்டினர். இந்த விழாக்களில் முன்னாள் பேரூராட்சி தலைவர் தொண்டாமுத்தூர் ரவி, பணிகள் குழுத்தலைவர் சாந்திமுருகன், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், உதவி ஆணையர்கள் மகேஷ்கனகராஜ், நித்யா, பூங்கா இயக்குநர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் குமரேசன், சத்தியமூர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, சித்ரா தங்கவேல், புஷ்பமணி, சித்ரா வெள்ளிங்கிரி, பிரபா ரவீந்திரன், வித்யா ராமநாதன், சுமா விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். சுகாதாரப் பிரிவில் மண்டல அலுவலர்கள் குணசேகரன், முருகன் மற்றும் உதவி பொறியாளர்கள் பிரதீப், பிரகதீஸ்வரன், சரண்யா, உத்தமன், கோபிநாத், ஜெயின்ராஜ், ஸ்ரீஹரிஹரன், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், பவுன்ராஜ், ஜெயபார்வதி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் திரளாகப் பங்கேற்றனர். அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி குறித்த காலத்திற்குள் தரமாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்பி மற்றும் மேயர் அறிவுறுத்தினர்.














