2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம் – மத்திய அரசின் அரசாணை கெஜட்டில் வெளியீடு

புதுடெல்லி : நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை இன்று மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கடைசியாக 2011ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்குப் பிறகு, 2021ல் நடைபெற திட்டமிடப்பட்டது. இந்த பணிக்காக ₹8,754 கோடி ஒதுக்கப்பட்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கவும் ₹3,941 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில், மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒப்புதல் வழங்கியது. அதன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் 2027 மார்ச் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், பனிப்பொழிவால் பாதிக்கப்படும் மாநிலங்களில்—ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், லடாக் ஆகியவற்றில்—இந்த கணக்கெடுப்பு முன்கட்டமாக 2026 அக்டோபர் 1ம் தேதிதான் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பதிவில், “முதல்முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட்டுள்ள இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு, 34 லட்சம் கணக்கெடுப்பு அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள், 1.3 லட்சம் பயிற்சி பெற்ற பணியாளர்கள், மொபைல் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி கணக்கெடுப்பை மேற்கொள்வார்கள்,” எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version