விதிகளை மீறி நள்ளிரவு வரை பிரச்சாரம்:  8 பேர் மீது வழக்கு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 8 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு நேரத்திற்குப் பிறகும் பிரச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டி, காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு ஆதரவு திரட்டும் விதமாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவ்வகையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசிப் பகுதியில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து, இரவு 11.40 மணி வரை அவர் சுற்றுப்பயணம் செய்து பேசியதாகக் கூறப்படுகிறது. இது தேர்தல் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான விதிமுறைகளை மீறிய செயல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, மாரனேரி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) அருண்பாண்டியன், சிவகாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாரனேரி போலீசார்:

புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, விருதுநகர் மத்திய மாவட்டச் செயலாளர் கனிப்பாண்டியன், சிவகாசி ஒன்றியச் செயலாளர் முருகன் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சார நேர விதிமுறைகளை மீறியதற்காக, கட்சியின் தலைவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version