தேனி மாவட்டம் போடி நகராட்சியின் தலைவரின் கணவர் மற்றும் தி.மு.க. கவுன்சிலருமான சங்கருக்குச் சொந்தமான ஏலக்காய் கிடங்குகளில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தொடர்பாக மதியம் வருமான வரித் துறை, ஜி.எஸ்.டி. புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இணைந்து அதிரடிச் சோதனை நடத்தினர். போடி நகராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி உள்ளார். இவரது கணவர் சங்கர் தி.மு.க.வின் கவுன்சிலராகவும், அக்கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஏலக்காய் வியாபாரமும் செய்து வருகிறார். இவரது மகனும் அவரது நண்பரும் இணைந்து ஏலக்காய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள், ஏலக்காய் மூட்டைகளை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பியதில் முறைகேடுகள் செய்து, பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஜி.எஸ்.டி. புலனாய்வு அமலாக்கப் பிரிவுக்குப் புகார்கள் சென்றுள்ளன. இந்த முறைக்கேடு புகார்களின் அடிப்படையில், நேற்று மதியம் சுமார் 2:00 மணியளவில், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வருமான வரித் துறை, ஜி.எஸ்.டி. மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் 50 பேர் கொண்ட குழுவாக, மத்திய பாதுகாப்புப் படையினருடன் போடிக்கு வந்தனர்.
அவர்கள் சங்கருக்குச் சொந்தமான: இரட்டை வாய்க்காலில் உள்ள ஏலக்காய் கிடங்கு முந்தல் சாலையில் உள்ள மற்றொரு கிடங்கு ஆகியவற்றின் பூட்டுக்களை உடைத்து உள்ளே சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் நடந்தபோது, போடி நகராட்சித் தலைவரான ராஜராஜேஸ்வரி, அவரது கணவர் சங்கர் மற்றும் மகன் ஆகியோர் ஊரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல மணி நேரம் நடந்த இந்தச் சோதனையில், முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணுச் சான்றுகள் சிக்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

















