பா.ஜ.க-வின் இளம் ரத்தம்: 45 வயதில் அகில இந்திய தலைவராகப் தேர்வாகும் நிதின் நபின் – நாளை முறைப்படி பதவி ஏற்பு.

பாரதிய ஜனதா கட்சியின் 12-வது தேசிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் இன்று டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. கடந்த 2020-ம் ஆண்டு முதல் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்து, அவருக்கு வழங்கப்பட்ட இருமுறை நீட்டிப்புகளும் நிறைவடைந்த நிலையில், கட்சியின் உயர்மட்டத் தலைமையில் ஒரு மிகப்பெரிய தலைமுறை மாற்றம் தற்போது நிகழ்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதைய செயல் தலைவராக உள்ள பீகாரைச் சேர்ந்த நிதின் நபின் (45), இன்று மதியம் 12 மணியளவில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத பட்சத்தில், அவர் போட்டியின்றி ஒருமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சரான நிதின் நபின், ஆர்.எஸ்.எஸ் (RSS) பின்னணியில் இருந்து வளர்ந்தவர். கடந்த டிசம்பர் 2025-ல் கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டபோதே, அவர்தான் அடுத்த தேசிய தலைவர் என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டது. பா.ஜ.க-வின் நீண்டகால அரசியல் திட்டமிடலின் ஒரு பகுதியாக, 2029 மக்களவைத் தேர்தலை முன்னிறுத்தி இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் இந்த நியமனம் பார்க்கப்படுகிறது. நிதின் நபின் நாளை (ஜனவரி 20) முறைப்படி புதிய தலைவராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பா.ஜ.க வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் தேசிய தலைவராகும் நபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

இந்தத் தேர்தல் நடைமுறைக்காகப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று டெல்லி சென்றுள்ளனர். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வது நிதின் நபினின் முன்னுள்ள உடனடி சவாலாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் அவர் தமிழகத்திற்குப் பயணம் மேற்கொண்டு தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இளமையான மற்றும் சுறுசுறுப்பான தலைமையின் கீழ் பா.ஜ.க-வின் அடுத்தகட்டப் பயணம் புதிய வேகத்தை எட்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Exit mobile version