மனிதாபிமானத்துடன் மலர்ந்த பிறந்தநாள்: விஐடி உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குப் பலகோடி மதிப்பிலான நல உதவிகள் வழங்கினார்!

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ். விசுவநாதன் அவர்களின் பிறந்தநாள் விழா, ஆடம்பரங்களைத் தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கான சேவைத் திருவிழாவாக எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. சமூக அக்கறையுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாட முடிவெடுத்த அவர், வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மையங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை நேரில் சென்று வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்தச் சேவைப் பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் ரவிச்சந்திரனிடம் நோயாளிகளின் பயன்பாட்டிற்காகக் கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகள் வழங்கப்பட்டன. சிஎம்சி மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சைப் பெற்று வரும் சிறுமி வர்ஷாவின் மூன்று கால பிசியோதெரபி சிகிச்சைக்காக ரூ. 25,000 நிதியுதவி மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நோயாளிக்குத் தேவையான உயிர் காக்கும் மருந்துகளை அவர் வழங்கினார். மேலும், மக்கள் களப்பணி இயக்கத்தின் டாக்டர் ரவிசங்கர் குழுவினரிடம் பார்வையற்றோருக்கான 50 ஊன்றுகோல்களையும், முதியோர் இல்லங்களுக்கு 15 நவீன மெத்தைகள் மற்றும் நடைபயிற்சி உபகரணங்களையும் வழங்கினார்.

கல்விப் பணியைப் போற்றும் விதமாக, வேலூர் மாவட்டத்திலுள்ள 10 அரசுப் பள்ளிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த சரஸ்வதியிடம் கழிப்பறை உபகரணங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. ரைஸ் மறுவாழ்வு மையம், கே.வி. சிறப்புப் பள்ளி, சிசு பவன், ஆத்திச்சூடி சிறப்புப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இல்லங்களில் பயிலும் குழந்தைகளுக்குச் சிறப்பு கல்விப் பொருட்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது. விஐடி வேந்தர் கோ. விசுவநாதன், துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், ரமணி பாலசுந்தரம் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஊழியர்கள் காதம்பரி எஸ். விசுவநாதனுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிறந்தநாளை முன்னிட்டு இளம் இந்திய அமைப்பு சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version