வரவேற்க வந்த அதிகாரியின் தலையில் பூந்தொட்டி வைத்த பீகார் முதலமைச்சர் !

பாட்னா : பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாட்னா நகரில் உள்ள எல்.என். மிஸ்ரா கல்வி நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய 20 ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சி மண்டபத்தில் நடந்த ஒரு சம்பவம் காரணமாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

விளையாட்டாக நடந்த செயல் வைரலாகியது !
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வித் துறை ஏசிஎஸ் சித்தார்த், முதல்வருக்கு மரியாதையாக ஒரு பூந்தொட்டியை வழங்கினார். அதனை பெற்ற நிதிஷ் குமார், அதை விளையாட்டாக எடுத்து, அச்சொந்த அதிகாரியின் தலையில் வைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். நிகழ்விடம் இருந்தவர்கள் இது தேவையற்ற செயல் என நினைத்து திகைத்தனர்.

சமூக வலைதளங்களில் விமர்சனம் :
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பல்வேறு தரப்பினரும் இதனை கண்டித்துள்ளனர். “இந்த செயல் மாநிலத்தின் மரியாதையை குலைக்கும் விதமாக உள்ளது” எனக் கூறியுள்ளனர்.

முந்தைய சர்ச்சைகள் :
இது முதல் முறையல்ல. கடந்த மார்ச் மாதம் செபக் தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே மேடையை விட்டு வெளியேறியதாலும், கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களைத் தொட முயன்றதாலும் நிதிஷ் குமார் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜேடி கடும் தாக்கு :
இதுகுறித்து ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்ஜய் திவாரி, “அவரது செயல் பீகார் மாநிலத்திற்கு வெட்கத்தை ஏற்படுத்துகிறது. அவரது மனநிலை கட்டுப்பாட்டில் இல்லை என்பதை இது காட்டுகிறது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Exit mobile version