பெங்களூர் :
18வது ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி) அணிக்காக, ஜூன் 4ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் வெற்றிப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டதால், கூட்டநெரிசல் ஏற்பட்டது.
மரணமடைந்தோர் :
இந்த நெரிசலில், 5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 56 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக ஆர்.சி.பி. நிர்வாகம், நிகழ்ச்சியை ஒழுங்கமைத்த தனியார் நிறுவனம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மீது கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நிவாரணம் :
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, கர்நாடக அரசு ₹10 லட்சம், ஆர்.சி.பி. நிர்வாகம் ₹10 லட்சம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ₹5 லட்சம் வழங்கும் என மொத்தமாக தலா ₹25 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடை நீக்கம் :
பெங்களூரு விதான சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
அதில், பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பானதாக கருதப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த், மத்திய மண்டல துணை கமிஷனர் சேகர், உதவி கமிஷனர் பாலகிருஷ்ணா, கப்பன்பார்க் இன்ஸ்பெக்டர் கிரீஷ் உள்ளிட்ட ஐந்து போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டோர் :
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டி.என்.ஏ நிறுவனம் மற்றும் ஆர்.சி.பி. நிர்வாகத்தைச் சேர்ந்த இருவர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கமைய, டி.என்.ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் மற்றும் ஆர்.சி.பி. நிர்வாகி நிகில் சோசாலே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற உத்தரவு :
இந்த சம்பவம் தொடர்பாக, கர்நாடகா உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில் பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியதுடன், வரும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.