WTC 2025 : லார்ட்ஸில் சண்டைக்குத் தயாரான ஆஸ்திரேலியா – தென்னாப்ரிக்கா !

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப்போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்தப் போட்டி, டெஸ்ட் உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுபவம் நிறைந்த ஆஸ்திரேலியா
நடப்பு சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலிய அணி, கேப்டன் பாட் கம்மின்ஸின் தலைமையில் அனுபவம் மற்றும் திறமையை கொண்ட வீரர்களுடன் களமிறங்குகிறது. உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக ஆடவுள்ளனர். வார்னருக்குப் பிறகு ஒரு நிரந்தர தொடக்க வீரரை தேர்வு செய்ய முடியாத நிலையில், லபுஷேனுக்கு மறுமீட்சி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்திலும், குறிப்பாக லார்ட்ஸிலும், லபுஷேன் சிறப்பாக ஆடியுள்ளதை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வலுவான டாப் ஆர்டர் : ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன் ஆகியோர் ரன்கள் குவிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவர்கள். பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் மற்றும் கம்மின்ஸ் மூவரும் அணி ரணகளத்தில் கொடூரமாக தாக்கவுள்ளார்கள்.

புதிய ரத்தத்துடன் தென்னாப்ரிக்கா
டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்ரிக்க அணி இளைய வீரர்களின் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. ரியான் ரிக்கல்டன், பெடிங்ஹாம், ஸ்டப்ஸ், முல்டர் உள்ளிட்டோர் சிறந்த திறமையுடன் வந்தாலும், மிகப்பெரிய மேடையான WTC இறுதிப்போட்டியில் அவர்கள் எப்படி செயல்படப்போகிறார்கள் என்பதே கேள்விக்குறி.

பந்துவீச்சில் திறமை : அனுபவம் வாய்ந்த லுங்கி இங்கிடி, கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு டெஸ்ட் ஆடவில்லை என்றாலும், அவரின் திறமை காரணமாக அணியில் இடம் பெற்றுள்ளார். இன்னொரு பந்துவீச்சாளர் பேட்டர்சன் அணியில் இடம்பெறாதது, ரசிகர்களிடம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மார்கோ யான்சன், ரபாடா, மகாராஜ் என பந்துவீச்சு தளம் பலம் பெற்றுள்ளது.

வானிலை – பிச்சும் முக்கியம் !
போட்டிக்கான லார்ட்ஸ் மைதானம் வேக பந்து வீச்சு ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த வாரங்களில் மழை இருந்தாலும், இப்போது வானிலை தெளிவாக உள்ளது. மழை இல்லாமல் போட்டி நடைபெறும் வாய்ப்பு அதிகம். ஆரம்பத்தில் பேட்ஸ்மேன்கள் தடுமாறாமல் சமாளித்தால், அதிக ஸ்கோர் பதிவுசெய்யும் சாத்தியம் உள்ளது.

வல்லுநர் கணிப்பு :
இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். “அழுத்தம் நிறைந்த சூழலில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடும் விதம் அவர்களது வலிமையை நிரூபிக்கிறது” என அவர் கூறியுள்ளார்.

போருக்கு தயாரான வீரர்கள் :
WTC இறுதிப் போட்டியில் ஐசிசி தரவரிசையில் உள்ள முன்னணி பந்துவீச்சாளர்களில் 5 பேர் இந்த இரண்டு அணிகளிலும் இடம் பெற்றுள்ளமை, போட்டியின் முக்கியத்துவத்தையும் பரபரப்பையும் மேலும் உயர்த்துகிறது.

Exit mobile version