சென்னை: லைகா நிறுவனத்துக்கு ரூ.21.29 கோடி மற்றும் 30% வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், விசாரணையை தொடர்ந்து நடத்தாமல் நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியுள்ளார். இதன் பேரில், வழக்கை வேறு அமர்வில் பட்டியலிட பதிவாளருக்கு அவர் அறிவுறுத்தினார்.
விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்றிருந்த ரூ.21 கோடிக்கு மேற்பட்ட கடனை, லைகா நிறுவனம் ஏற்று செலுத்தியிருந்தது. முழுத்தொகையும் திருப்பிச் செலுத்தப்படும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகாவுக்குச் செல்லும் வகையில் இரு தரப்பும் ஒப்பந்தம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்த நிபந்தனைகளை மீறி படங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டி, பணத்தை மீட்க லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், முதலில் ரூ.15 கோடியை டெபாசிட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இரு நீதிபதிகள் அமர்வு, அந்த உத்தரவை உறுதி செய்யும் வகையில், தொகை செலுத்தப்படும் வரை விஷால் தயாரிக்கும் படங்கள் திரையரங்கங்களிலும் ஓடிடி தளங்களிலும் வெளியாகக் கூடாது என்ற தற்காலிக தடையையும் விதித்தது.
பின்பு, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், விஷால் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர், மூன்று கார்கள், ஒரு பைக், இரண்டு வங்கி கணக்குகளின் விவரங்கள், மேலும் வீட்டுக்கான கடன் பற்றிய ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.
கடந்த ஜூன் மாதம், விசாரணை முடிவில், விஷால் லைகா நிறுவனத்திற்கு முழுக்கடனையும் 30% வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். வழக்குச் செலவும் விஷால் தரப்பே ஏற்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்நிலையில் அந்த அமர்வில் இருந்த நீதிபதி ஜெயச்சந்திரன், முந்தைய தொடர்புகளை முன்னிட்டு தன்னை விசாரணையிலிருந்து விலக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. வழக்கை புதிய அமர்வில் பட்டியலிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
















