கோவையில் அதிரடி ‘எஜூகான்வியா’ மாநாடு: சர்வதேசக் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட திமோர்-லெஸ்டே நாட்டின் அரசு தூதர்!

கோவையின் எட்டிமடையில் உள்ள ஹார்மனி சம்மிட் மையம், இந்திய உயர்கல்வித் துறையின் புதிய மாற்றங்களுக்குச் சாட்சியாக மாறியுள்ளது. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி கல்வி நிறுவனமான ஐஸீ (ICE) குழுமம் மற்றும் ப்யூச்சர் கேர் (Future Care) குழுமம் இணைந்து “எஜூகான்வியா” (Educonvia) என்ற பெயரில் அகில இந்திய உயர்கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் பிரம்மாண்ட கல்விக் கண்காட்சியை மிகச் சிறப்பாக நடத்தியது. நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான முன்னணி கல்வி ஆலோசகர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்று, எதிர்காலக் கல்வி முறைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

மாநாட்டின் மிக முக்கிய நிகழ்வாக, திமோர்-லெஸ்டே ஜனநாயகக் குடியரசு நாட்டின் அரசு தூதர் கார்லிட்டோ நூன்ஸ் (Carlito Nunes) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில், சர்வதேச நாடுகளுக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்புகள் மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் (Student Exchange Programs) உலகளாவிய கல்விச் சூழலை வலுப்படுத்துவதில் இன்றியமையாத பங்காற்றுகின்றன என்று குறிப்பிட்டார். இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்கள் சர்வதேசத் தரத்திலான கல்வியைப் பெறுவதற்கு இத்தகைய மாநாடுகள் ஒரு சிறந்த களமாக அமையும் என அவர் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக, ப்யூச்சர் கேர் குழுமத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான மனோஜ் மனயத்தோடி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான மற்றும் தரமான உலகளாவிய கல்வி வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால், கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி ஆலோசகர்களுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து, சூரத்தைச் சேர்ந்த பி.பி. சவானி பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஸ்நேஹ் சவானி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, கல்வி நிறுவனங்களில் புகுத்தப்பட வேண்டிய புதுமை முயற்சிகள் மற்றும் தொழில்துறையின் தேவைகளைச் சந்திக்கும் வகையிலான நவீன கல்வி முறைமைகள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் ஐஸீ குழுமக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முரளி கிருஷ்ணா, டாக்டர் சஹீஷ் மொய்தீன் மற்றும் லிம்னேஷ் வி.என். உள்ளிட்ட உயர் நிர்வாகிகள் கலந்துகொண்டு, பங்கேற்பாளர்களுடன் உயர்கல்வித் துறையின் தற்போதைய போக்குகள் குறித்துக் கலந்துரையாடினர். மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற பிரம்மாண்ட கல்விக் கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்களது அரங்குகளை அமைத்திருந்தன. இதில் அந்தந்த நிறுவனங்களின் தனித்துவமான கல்வித் திட்டங்கள், நவீன ஆய்வக வசதிகள் மற்றும் மாணவர்களின் சாதனைகள் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தென்னிந்தியாவின் கல்வி மையமாகத் திகழும் கோவையில் நடைபெற்ற இந்த அகில இந்திய மாநாடு, உயர்கல்வி ஆலோசகர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version