சொந்த நிலத்தைத் தந்து பள்ளியை உயர்த்திய முன்னாள் டி.ஜி.பி பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தனது 100-வது ஆண்டு நிறைவை எட்டியதை முன்னிட்டு, பள்ளியின் நூற்றாண்டு விழா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடனும் உணர்வுப்பூர்வமான நினைவுகளுடனும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் இந்திராகாந்தி மற்றும் பள்ளியின் புரவலர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் தொடக்கமாக ஆசிரியை பாக்கியலட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சி மற்றும் சாதனைகள் குறித்த ஆண்டறிக்கையைத் தலைமை ஆசிரியை சுரேகா வாசித்தார். இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி-யும், தற்போதைய தமிழ்நாடு ஐந்தாம் காவல் ஆணைய உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி ஊக்கமளித்தார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கடந்த 1925-ம் ஆண்டு ஒரு சிறிய அரசுத் தொடக்கப்பள்ளியாகத் தனது பயணத்தைத் தொடங்கிய இப்பள்ளி, நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பே 1945-ம் ஆண்டில் நடுநிலைப்பள்ளியாக வளர்ச்சி பெற்றது. பின்னர் 2006-ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்ததால் இதனை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், போதிய இடவசதி இல்லாத காரணத்தால் தரம் உயர்த்துவதில் பெரும் சிக்கல் நீடித்தது. இக்கட்டான அந்தச் சூழலில், இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் என்ற நன்றிக்கடனுடன், ஓய்வுபெற்ற டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது 3.40 ஏக்கர் பூர்வீக நிலத்தைப் பள்ளி விரிவாக்கத்திற்காகத் தானமாக வழங்கினார். அவரது இந்த உன்னதமான கொடையினால் தற்போது மேல்நிலைப் பள்ளியாக மிளிரும் இப்பள்ளியில் 499 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

படிப்பில் மட்டுமின்றிச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் முன்னோடியாகத் திகழும் இப்பள்ளி, விருதுநகர் மாவட்டத்திலேயே அதிக மரங்களைக் கொண்ட “பசுமைப் பள்ளி”யாகத் தேர்வு செய்யப்பட்டுப் பெருமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நூறாண்டு காலக் கல்விச் சேவையைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், தற்போதைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். தங்கள் ஊர் பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் அதன் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னாள் மாணவரின் வருகை எஸ்.அம்மாபட்டி கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version