“திராவிட கட்சிகள் இல்லாத தமிழகம் பாஜகவின் நீண்டகால இலக்கு” – திருமாவளவன் விமர்சனம்

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள அடுத்த சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பாஜக-அதிமுக கூட்டணி மீதான விமர்சனங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலுக்கட்டினார். திராவிட கட்சிகளுக்கு எதிரான பாஜகவுடன் அதிமுக இணைவது முரணான செயல் என அவர் தெரிவித்தார்.

பாஜகவுடன் தொடர்ந்தால் அதிமுக பெரும் பின்னடைவை சந்திக்கும் எனவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் பாஜகவை “தோழமை கட்சி” என அதிமுக கருப்பது பரிதாபமாகவும் இருக்கிறது எனவும் அவர் கூறினார்.

திருமாவளவன் கூறியதாவது :

“தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்து, தமிழ்நாட்டை மீட்போம், மக்களை காப்போம் என்று கூறுவது நகைச்சுவையாகவும் முரணாகவும் உள்ளது.

பெரியாரையும் அண்ணாவையும் அவமதிக்கும் பாஜகவினரே, திராவிட கட்சிகள் இல்லாத தமிழகம் வேண்டும் என்று பல காலமாக முழங்கிக்கொண்டு இருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத பாரதம், கழகங்கள் இல்லாத தமிழகம் – இதுதான் அவர்களின் நீண்டகால இலக்கு.

அதிமுகவை விமர்சிக்கவேண்டியது எனது நோக்கம் அல்ல. அதில் எனக்கு எந்தவித ஆதாயமும் இல்லை. எனக்கு ஆதாயம் வேண்டுமென்றால் பாஜகவுடன் அதிமுக இன்னும் நெருக்கமாக இணைந்திருக்க வேண்டியதுதான். ஆனால், நான் ஆதாய அரசியலை விரும்புவதில்லை,” என்றார்.

தமிழகத்தில் மே மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தயார் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இவ்வகை அரசியல் கருத்துகள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Exit mobile version