மலை மாவட்டமான நீலகிரி மக்களின் நீண்டகால மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ரூ.7.24 கோடி மதிப்பீட்டில் நவீனமாக மேம்படுத்தப்பட்ட கேத் ஆய்வகத்தை (Cath Lab) இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, இந்த உயர்தர ஆய்வகத்தின் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பேசிய அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், “சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கும் நீலகிரி மாவட்டத்தில், இருதய நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக இருந்து வந்தது. இதற்கு முன்பு ஆஞ்சியோகிராம் போன்ற சிகிச்சைகளுக்காக நோயாளிகள் கோவைக்குச் செல்ல வேண்டியிருந்தது. தற்போது, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் (TNMSC) மற்றும் தேசிய சுகாதார இயக்கம் (NHM) நிதி மூலம் ‘பிலிப்ஸ் அசுரியன் 5எம்12’ (Philips Azurion 5M12) என்ற உலகத்தரம் வாய்ந்த கருவியுடன் இந்த கேத் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனரி ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் நிரந்தர இதயமுடுக்கி (Pacemaker) பொருத்துதல் போன்ற சிகிச்சைகளை இனி உதகையிலேயே மேற்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
மாரடைப்பு ஏற்படும் ‘பொன்னான நேரத்தில்’ (Golden Hour) நோயாளிகளுக்கு உரியச் சிகிச்சை கிடைப்பதை இந்த ஆய்வகம் உறுதி செய்யும். மாரடைப்பு ஏற்பட்ட பின் உடனடியாகச் செய்யப்படும் இத்தகைய மருத்துவத் தலையீடுகள், நோயாளியின் இதயம் செயலிழப்பதைத் தடுத்து விரைவான மீட்சிக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025 ஏப்ரல் முதல் முழுவீச்சில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, இந்த புதிய ஆய்வகம் ஒரு மாபெரும் மகுடமாக அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் உதகை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், நகர மன்றத் தலைவர் வாணீஸ்வரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், நகர மன்றத் துணைத்தலைவர் ரவிக்குமார், இருப்பிட மருத்துவ அதிகாரி ரவிசங்கர், டாக்டர் பாலசுப்ரமணியன், கல்லூரி துணை முதல்வர் ஜெயலலிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டு, இந்த நவீன மருத்துவ வசதியின் பயன்களைப் பொதுமக்களுக்கு விளக்கினர்.















