தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்கு முனைப் போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது. ஒருபுறம் ஆளும் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி, மறுபுறம் மீண்டும் கைகோர்த்துள்ள அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மற்றொரு புறம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி எனத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி, தவெக தலைவர் விஜயுடன் திரைமறைவில் நடத்தி வரும் நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
இதன் உச்சகட்டமாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராகவும், கட்சியின் தரவு பகுப்பாய்வுப் பிரிவுத் தலைவராகவும் கருதப்படும் பிரவீன் சக்ரவர்த்தி, தவெக தலைவர் விஜயைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதை இன்று கோவையில் உறுதிப்படுத்தியுள்ளார். “ஒரு இரண்டு பேர் சந்திக்கக்கூடாதா? விஜய் தற்போது ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்” என்று அவர் கூறியிருப்பது, திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், “இனி வெறும் இடப் பங்கீடு மட்டும் போதாது, ஆட்சியில் பங்கும், அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் இது” எனப் பகிரங்கமாகத் தெரிவித்தது திமுக – காங்கிரஸ் இடையே ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 60 ஆண்டுகாலப் பலவீனத்தை நீக்க வேண்டும் என்றால், ஆட்சியில் பங்கு பெறுவது அவசியம் என்ற கோரிக்கையை மாநிலத் தலைவர் செல்வபெருந்தகையைத் தாண்டி, டெல்லி மேலிடத்திற்கு நெருக்கமான நிர்வாகிகள் வலுவாக முன்வைக்கின்றனர். 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக் கோரி வரும் நிலையில், திமுக தரப்பிலிருந்து 32 இடங்களுக்கு மேல் வழங்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இந்த இழுபறி ஒருபுறமிருக்க, “இயற்கையான கூட்டாளி” எனத் தன்னை வர்ணிக்கும் விஜய்யின் தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், கூடுதல் இடங்களுடன் அமைச்சரவையிலும் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு தரப்பு காங்கிரஸ் தொண்டர்களிடையே நிலவுகிறது. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தின் கடனைத் தமிழ்நாட்டின் கடன் சூழலுடன் ஒப்பிட்டுப் பேசி ஏற்கனவே திமுக-வை அதிருப்திக்குள்ளாக்கிய பிரவீன் சக்ரவர்த்தி, தற்போது விஜயைச் சந்தித்திருப்பது ஒரு ‘பிளான் பி’ (Plan B) முயற்சியாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
















