சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சவுரிப்பாளையத்தில் குடிகொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில், உலக நன்மை வேண்டியும் ஊர் செழிக்கவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாசி மாத தீமிதி திருவிழா இந்த ஆண்டும் மிக விமரிசையாக நடைபெற்றது. எடப்பாடி ஒன்றியம் செட்டியங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சவுரிப்பாளையத்தில் அமைந்துள்ள இக்கோவிலின் மாசித் திருவிழா, கடந்த 15 நாட்களுக்கு முன்பு பக்தி பரவசத்துடன் ‘பூச்சாட்டுதல்’ நிகழ்வுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்குப் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்று வந்தன. விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெற்றனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீமிதி திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது. இதற்காகக் கோவில் முன்பாக பிரம்மாண்ட அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. அதிகாலை முதலே விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி, ஊர்வலமாக வந்து அக்னி குண்டத்தில் இறங்கித் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் உடலில் பல்வேறு அலகுகளைக் குத்திக்கொண்டு ‘ஓம் சக்தி’ பராசக்தி’ என முழக்கமிட்டபடி தீமிதித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
குறிப்பாக, இந்த ஆண்டு விழாவில் இரண்டு பக்தர்கள் ‘விமான அலகு’ குத்திக்கொண்டு, அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்து அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி பக்தர்களை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இத்தகைய கடினமான நேர்த்திக்கடனைப் பக்தர்கள் எவ்விதத் தடையுமின்றிச் செலுத்தியது அம்மனின் அருளாற்றலை வெளிப்படுத்துவதாகப் பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சவுரிப்பாளையம் மட்டுமின்றி எடப்பாடி, செட்டியங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ சக்தி மாரியம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், அன்னதானம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த மாசித் திருவிழா, எடப்பாடி பகுதியில் ஒரு பெரும் ஆன்மீக சங்கமமாக அமைந்தது.














