தஞ்சையில் ‘ஒரு கூட்டுப் பறவைகள்’ சங்கமம்: பணிக்கால நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அலுவலர்கள்

தஞ்சாவூர் ஓட்டல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்ட அரங்கில், தஞ்சை மாவட்ட பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அலுவலர்களின் 9-ஆம் ஆண்டு நலம் விசாரிப்புச் சந்திப்பு நிகழ்ச்சி ‘ஒரு கூட்டுப் பறவைகள்’ என்ற பெயரில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. பல ஆண்டுகள் ஒரே துறையில் தோளோடு தோள் நின்று பணியாற்றி, தற்போது ஓய்வுக்காலத்தை அனுபவித்து வரும் முன்னாள் அலுவலர்கள், தங்களது பணிக்காலப் பசுமை நினைவுகளை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த ஆத்மார்த்தமான சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தனர்.

நிகழ்ச்சியை நிறுவனத் தலைவர் குப்பு வீரமணி குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். தலைவர் மா. ஜெயக்குமார் தலைமை வகித்து உரையாற்றுகையில், அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றாலும், தங்களுக்குள் இருக்கும் அந்தத் தொழில்முறைத் நட்பும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். முன்னதாக, துணைத்தலைவர் ஜெயராமன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட நண்பர்கள், ஒருவரையொருவர் நலம் விசாரித்துத் தழுவிக்கொண்ட காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இணைச் செயலாளர்கள் சின்னனய்யா, துரைராஜன் உள்ளிட்ட பல மூத்த அலுவலர்கள், தாங்கள் பணியாற்றிய காலத்தில் எதிர்கொண்ட சவால்கள், தொழில்நுட்ப நுணுக்கங்கள் மற்றும் தற்போதைய வாழ்க்கை அனுபவங்களை ஒருவருக்கொருவர் விரிவாகப் பகிர்ந்து கொண்டனர். “பணியில் இருந்தபோது இருந்த அதே சுறுசுறுப்பும், அன்பும் இந்தச் சந்திப்பின் மூலம் மீண்டும் துளிர்விட்டுள்ளது” எனப் பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பொருளாளர் சுப்ரமணியன் முழு நிகழ்ச்சியையும் நேர்த்தியாக ஒருங்கிணைத்து நடத்தினார். விழாவின் நிறைவில் தணிக்கையாளர் சுந்தர்ராஜீ நன்றி கூறினார். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பானது, வெறும் நட்பு ரீதியான நிகழ்வாக மட்டுமின்றி, ஓய்வுபெற்ற அலுவலர்களின் மன அழுத்தத்தைப் போக்கிப் புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு கூடலாக அமைந்தது.

Exit mobile version