அரசியல் மாற்றம் வேண்டி 40 அடி உயர டவர் மீது ஏறி பனியன் தொழிலாளி போராட்டம்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் சாலை வாய்க்கால் மேடு பகுதியில், இன்று பகல் நேரத்தில் தனிநபர் ஒருவர் மேற்கொண்ட விபரீதப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவில் வழி அருகே அமைந்துள்ள சுமார் 40 அடி உயரமுள்ள பிஎஸ்என்எல் (BSNL) தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது ஏறிய நபர் ஒருவர், அங்கிருந்தவாறு தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என முழக்கமிட்டார். அவர் தனது கையில் கொண்டு சென்றிருந்த இந்தியத் தேசியக் கொடி மற்றும் அதிமுகவின் கட்சித் கொடியை டவரின் உச்சியில் கட்டி, தற்போதைய “சிஸ்டம்” சரியில்லை என்றும், அரசியல் மாற்றமே ஒரே தீர்வு என்றும் உரக்கக் கூறி போராட்டத்தைத் தொடங்கினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் நல்லூர் போலீசார், டவரின் மேலே இருந்த நபரிடம் கீழே இறங்கி வருமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்ததுடன், தான் கையில் வைத்திருந்த பட்டாசுகளை அவ்வப்போது பற்றவைத்து கீழே எறிந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது. போராட்டக்காரர் போலீசாரிடம் பேசுகையில், தனது கோரிக்கைகள் அனைத்து ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும், அதிமுக தலைமை தனது கருத்துகளைக் கேட்டு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் பிடிவாதமாக வலியுறுத்தினார்.

நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மிகவும் நிதானமாகப் பேசி அவரைச் சமாதானப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அவரே தானாக முன்வந்து கீழே இறங்கினார். அவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த மூக்கையா (42) என்பதும், தற்போது திருப்பூர் கோவில் வழி பகுதியில் தங்கி ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது; இதே மூக்கையா கடந்த ஆண்டு ஜனவரி மாதமும் இதே தாராபுரம் சாலையில் உள்ள வேறொரு டவர் மீது ஏறி இது போன்ற போராட்டத்தை நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரின் முக்கியச் சாலையான தாராபுரம் சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்தி, மூக்கையாவை மேலதிக விசாரணைக்காக நல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் தற்கொலை முயற்சி போன்ற கோணங்களில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. அரசியல் ஆர்வத்தால் இது போன்ற விபரீதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் பின்னணி குறித்து உளவுத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version