தென்னிந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் கலாச்சாரத் திருவிழாக்களில் ஒன்றான ‘யுகம்’ விழாவின் 14-வது பதிப்பு, கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. குமரகுரு வளாகத்திலுள்ள சாராபாய் கலாம் அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்டத் தொடக்க விழாவில், லார்சன் அன்ட் டூப்ரோ (L&T) நிறுவனத்தின் உயர் அதிகாரி ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த அறிவுசார் மற்றும் கலைப் பயணத்தில், தொழில்நுட்பப் போட்டிகள், புத்தாக்கப் பயிலரங்குகள் மற்றும் கண்கவர் கலாச்சார நிகழ்வுகள் என மாணவர்களின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் அணிவகுக்கின்றன.
தொடக் விழாவின் சிறப்பம்சமாக, மகாராஷ்டிர மாநிலத்தின் வீரமும் பாரம்பரியமும் செறிந்த ‘நாசிக் டோல்’ இசை முழக்கம் மைதானத்தை அதிரச்செய்தது. இதனைத் தொடர்ந்து “தி ஹியூமன் எட்ஜ்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற ‘இன்ஸ்பையர் இந்தியா’ இளையோர் கருத்தரங்கில், கோவை பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் எஸ். இன்பா அவர்கள் கலந்துகொண்டு, “சேவையே சிறந்த அறம்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உத்வேகம் அளித்தார். நேர்மை மற்றும் விடாமுயற்சியே ஒருவனைச் சிறந்த இலக்கை அடையச் செய்யும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், டிஜிட்டல் படைப்பாளர் சாய் சேது இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகவும், பொறுப்புடனும் கையாள்வது என்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களின் தொழில்முனைவோர் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ‘அங்காடி’ சந்தை மற்றும் ‘இ-சமிட்’ நிகழ்வுகள் தொடங்கப்பட்டன. ‘அங்காடி’ சந்தையில் மாணவர்கள் தாங்களே உருவாக்கிய கைவினைப் பொருட்கள் மற்றும் புத்தாக்கப் படைப்புகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர். ‘இ-சமிட்’ நிகழ்வில் பல்வேறு நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்று, எதிர்காலத் தொழிலதிபர்களாக உருவாகத் துடிக்கும் மாணவர்களுக்குத் தொழில் நுணுக்கங்களை வழங்கினர். மேலும், ‘இ-கிரிட்’ பகுதியில் மின்சார வாகனங்கள் மற்றும் எதிர்காலப் போக்குவரத்துத் தொழில்நுட்பங்கள் குறித்தும், ‘கேரியர் பேர் 3.0’ மூலம் வெளிநாட்டு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முதல் நாள் விழாவின் இறுதி நிகழ்வாக, ‘அக்ரதா’ மற்றும் ‘எவோக்’ குழுக்களின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, புகழ்பெற்ற ‘அகம்’ இசைக் குழுவினரின் கர்நாடக இசை மற்றும் ராக் கலந்த “எக்கோஸ் ஆப் பயர்” இசை நிகழ்ச்சி மாணவர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
