திருவாரூர் மாவட்டத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார அடையாளமாகத் திகழும் மன்னார்குடியில், மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமான சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னார்குடி பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் முஹல்லாவாசிகள் ஒருங்கிணைந்து நடத்திய இந்த நிகழ்வு, ஜாதி, மத மற்றும் அரசியல் எல்லைகளைக் கடந்து சகோதரத்துவத்தின் சங்கமமாக அமைந்தது. பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இந்த எழுச்சியான நிகழ்ச்சிக்கு, நிர்வாக சபைத் தலைவர் எம்.அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.ஷேக் அலாவுதீன் முன்னிலை வகிக்க, இமாம் அப்துல் ரஜாக் மிஸ்பாஹி அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார்.
இன்றைய காலக்கட்டத்தில் சமூக ஒற்றுமை எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், மௌலவி பி.முஹமது நாசர் புகாரி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், “சகோதர சமுதாய சொந்தங்களிடையே அன்பு மலர வேண்டும் என்றும், அனைவருடைய ஒற்றுமைக்காகவும் நபிகள் நாயகம் காட்டிய வழிகள் இன்றும் உலகிற்குத் தேவையான ஒரு பாடம்” என்பதைத் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கங்களுடன் எடுத்துரைத்தார். இந்த இஃப்தார் நிகழ்வில் இஸ்லாமியப் பெருமக்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒரே பந்தியில் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தித் தங்களது நட்பைப் பகிர்ந்து கொண்டது பார்ப்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் நகரச் செயலாளர் ஜெகதீசன், அதிமுக நகர மன்ற முன்னாள் உறுப்பினர் கண்ணதாசன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் ரெகுபதி, சி.பி.எம். நகரச் செயலாளர் தாயுமானவர் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், திராவிடக் கழக ஒன்றிய இளைஞரணித் தலைவர் பி.இளங்கோவன், விவசாய சங்கச் செயலாளர் முத்துகிருஷ்ணன், மாதர் சங்க நகரச் செயலாளர் எஸ். சகாயராணி, மற்றும் திருவள்ளுவர் பொதுநல சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோ. தெஷ்ணாமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இஃப்தார் விருந்து மற்றும் தொழுகைக்கான விரிவான ஏற்பாடுகளைத் துணைத் தலைவர் ஏ.அப்துல் காதர், துணைச் செயலாளர் எம்.ரபிக் உசேன், பொருளாளர் ஏ.அப்துல் ரகுமான் மற்றும் பள்ளிவாசல் இளைஞர் அணியினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். ரமலான் மாதத்தின் புனிதத்தை உணர்த்தும் வகையிலும், மன்னார்குடியின் பாரம்பரியமான மதநல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையிலும் அமைந்த இந்த நிகழ்வு, இப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.















