கொடைக்கானல் மலைச்சாலையில் 150 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து மதுரை பயணிகள் 5 பேர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைச்சாலையில் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த கார் 150 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில், மதுரையைச் சேர்ந்த 5 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த 5 நபர்கள், கொடைக்கானலில் நடைபெற்ற ஒரு திருமண சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை வேகன் ஆர் காரில் மலை ஏறியுள்ளனர். சுப நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் முடித்துவிட்டு, இன்று மாலை வேளையில் மீண்டும் மதுரை நோக்கி வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் அவர்கள் இறங்கிக்கொண்டிருந்தனர். கார் பெருமாள்மலை அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் பிரேக் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மலைச்சாலையின் வலது புறமிருந்த சுமார் 150 அடி ஆழம் கொண்ட கிடுகிடு பள்ளத்திற்குள் பாய்ந்தது.

தனியார் நிலத்திற்குள் கார் தலைகுப்புற கவிழ்ந்து நொறுங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். இந்த கோர விபத்தில் காரில் பயணித்த பாபு(47), உமர்(27) ஆகிய இருவருக்கும் கை மற்றும் கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற மூன்று நபர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்தவர்களை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்ட பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலைச்சாலையில் நிலவும் மூடுபனி மற்றும் வளைவுகளைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களின் தன்மையைச் சரிபார்த்து மிதமான வேகத்தில் இயக்க வேண்டும் என காவல்துறையினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

Exit mobile version