தமிழகத்தில் கோடைக்கால வெப்பம் இப்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு அண்ணா திமுக சார்பில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை வடவள்ளி பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நீர்மோர் பந்தலின் திறப்பு விழா நேற்று எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்த நீர்மோர் பந்தலை அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அம்மன் அர்ஜுணன் மற்றும் கழக மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தனர். கோடையின் தாக்கத்திலிருந்து தப்பிக்கப் பொதுமக்களுக்கு உதவும் வகையில், இந்த முகாமில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட நீர்மோர், இளநீர் மற்றும் தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சியான பழங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வின் சிறப்பம்சமாக, பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமன்றி, அப்பகுதியில் பணியாற்றும் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களையும் அழைத்து அவர்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்களை வழங்கி நிர்வாகிகள் கௌரவித்தனர். “வெயிலின் தாக்கம் குறையும் வரை இந்த நீர்மோர் பந்தல் தொடர்ந்து செயல்படும்; மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என எம்எல்ஏ அம்மன் அர்ஜுணன் தெரிவித்தார்.
இந்த மக்கள் நலத்திட்டத் தொடக்க விழாவில் பகுதிச் செயலாளர், வட்டச் செயலாளர்கள், கழகத்தின் பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வடவள்ளி பேருந்து நிலையப் பகுதியில் அதிமுகவினர் மேற்கொண்டுள்ள இந்தச் சேவை, அந்த வழியாகச் செல்லும் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.















