கேரள மாநிலத்திற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வனப்பாதுகாப்பு மற்றும் மனித – வனவிலங்கு மோதல்களைத் தடுப்பதில் ஒரு புதிய மைல்கல்லைத் தொடங்கி வைத்தார். வனப்பகுதியில் மனித நடமாட்டம் இல்லாமலே, அடர்ந்த காடுகளுக்குள் சுற்றித் திரியும் காட்டுயானைகளைக் கண்காணிக்கவும், குறிப்பாக யானைகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களை முன்கூட்டியே கண்டறியவும் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை அவர் அறிமுகம் செய்து வைத்தார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், காடுகளின் பாதுகாப்பிற்காக நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்த அதிநவீன ட்ரோன் வெறும் கண்காணிப்பு கருவியாக மட்டுமில்லாமல், ஆக்ரோஷமாக இருக்கும் யானைகளை அமைதிப்படுத்தி, அவற்றை எவ்வித பாதிப்பும் இன்றி காட்டின் ஆழமான பகுதிகளுக்குப் பாதுகாப்பாக விரட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வனப்பகுதிகளில் ரோந்து செல்லும் ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய உயிருக்கு ஆபத்தான சூழல்களை முன்கூட்டியே எச்சரிப்பதோடு, யானைகள் எதிர்கொள்ளும் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் குழுக்களுக்கு இடையிலான மோதல்களைக் கண்டறிந்து உடனடித் தீர்வுகாணவும் உதவும். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு வனத்துறைக்காக முதல் ட்ரோனை உருவாக்கிய பெருமைக்குரிய ‘கருடா ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், இந்த நவீன ட்ரோனைத் தயாரித்துள்ளது. ஏற்கனவே இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநில வனத்துறைகளுடன் இணைந்து பணியாற்றி வரும் இந்நிறுவனம், தற்போது கேரளாவின் சவாலான வனப்பகுதிகளுக்கு ஏற்ப இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் யானைகளின் வாழ்விடப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, கேரளா மற்றும் அண்டை மாநில எல்லைகளில் நிலவும் யானைகள் தொடர்பான சிக்கல்களுக்கு ஒரு நிரந்தர டிஜிட்டல் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















