தமிழக இளைஞர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் உன்னத நோக்கத்துடன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் ‘திறனகம்’ (மாவட்ட திறன் மையங்கள்) எனும் புதிய முன்னெடுப்பைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள தனது ‘குறிஞ்சி’ இல்ல முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று (03.03.2026), 23 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு மாவட்ட திறன் மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முறைப்படி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘திறனகம்’ மையங்கள், மாநில இளைஞர்களுக்கு ஒருங்கிணைந்த தொழில் வழிகாட்டல், திறன் மேம்பாட்டு ஆலோசனைகள், பயிற்சி இணைப்புகள் மற்றும் நேரடி வேலைவாய்ப்புத் தகவல்களை வழங்கும் ஒரு முழுமையான தளமாகச் செயல்படும். முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 38 மாவட்டங்களிலும் பிரத்யேக மாவட்ட திறன் அலுவலகங்கள் (திறனகம்) அமைக்கத் திட்டமிடப்பட்டு, தற்போது அதன் பணிகள் முழுவீச்சில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரைத்தளத்தில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘திறனகம்’ மையத்தில் சிறப்புத் திறப்பு விழா நடைபெற்றது. துணை முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொலி வாயிலாகத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, திண்டுக்கல் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன் இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி ஜோ. இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்தத் ‘திறனகம்’ மையங்கள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “இனி வரும் காலங்களில் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புப் பயிற்சிகளைத் தேர்வு செய்யவும், சர்வதேசத் தரத்திலான திறன் மேம்பாட்டு ஆலோசனைகளைப் பெறவும் இந்த மையங்கள் ஒரு வரப்பிரசாதமாக அமையும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் வேலைவாய்ப்புச் சந்தைக்குத் தேவையான மனிதவளத்தைத் தயார் செய்வதே இதன் முக்கிய இலக்கு” எனத் தெரிவித்தனர். இந்தத் திறப்பு விழாவில் அரசு உயர் அலுவலர்கள், திறன் மேம்பாட்டுக் கழகப் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

















