மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நகரி கல்வி இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி சுபிக்க்ஷா, சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று மிகச்சிறந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார். மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஐந்தாவது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் சதுரங்கப் போட்டி – 2025’ (5th International Grandmaster Open Chess Tournament) உலகெங்கிலும் இருந்து பல திறமையான வீரர்களை ஈர்த்தது. இப்போட்டியில் ‘மதிப்பீடு பெறாத மாணவியர்’ (Unrated Category) பிரிவில் பங்கேற்ற மாணவி சுபிக்க்ஷா, தனது அபாரமான புத்திக்கூர்மையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
மொத்தம் ஒன்பது சுற்றுகளாக நடைபெற்ற இந்தச் சவாலான தொடரில், சுபிக்க்ஷா ஆறு புள்ளிகளைக் குவித்தார். அத்துடன் 1657 என்ற மிக உயரிய செயல்திறன் மதிப்பெண் (Performance Rating) பதிவு செய்து, அந்தப் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். ஒரு சிறிய கிராமப்புறப் பள்ளியில் பயிலும் மாணவி, சர்வதேச தரத்திலான போட்டியில் இத்தகைய புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுபிக்க்ஷாவின் இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டும் விதமாக, அவருக்கு ஒரு புதிய ‘மாருதி சுசுகி ஆல்டோ கே10’ (Maruti Suzuki Alto K10) கார் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச மேடையில் சாதனை படைத்து ஊர் திரும்பிய மாணவிக்கு, நகரி கல்வி இன்டர்நேஷனல் பள்ளியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளித் தலைவர் செந்தில் குமார், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு மாணவிக்கு மாலை அணிவித்துப் பாராட்டினர்.
இளவயதிலேயே செஸ் விளையாட்டில் உலகத் தரத்திலான வீரர்களுக்கு இணையாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ள சுபிக்க்ஷா, எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த கிராண்ட் மாஸ்டராக உருவாக வேண்டும் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பரிசளிப்பு விழாவானது மதுரையின் விளையாட்டு வரலாற்றில் இளம் வீராங்கனை ஒருவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.
















