சென்னை : பராமரிப்பு பணிகள் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் 8 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டது. இதில் 4 சர்வதேச மற்றும் 4 உள்நாட்டு விமானங்கள் அடங்கும்.
இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ரத்து செய்யப்பட்ட விமானங்கள் விவரம் பின்வருமாறு:
- துபாய் – சென்னை (AI906)
- டில்லி – மெல்போர்ன் (AI308)
- மெல்போர்ன் – டில்லி (AI309)
- துபாய் – ஐதராபாத் (AI2204)
- புனே – டில்லி (AI874)
- ஆமதாபாத் – டில்லி (AI456)
- ஐதராபாத் – மும்பை (AI2872)
- சென்னை – மும்பை (AI571)
விமான பராமரிப்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம் :
மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட 70 பயணிகளுடன் கொண்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானி எடுத்த முடிவின்படி அவசரமாக சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போதே இயந்திரக் கோளாறை விமானி கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிறப்பான செயல்முறையால், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான பின்னணியில்…
அண்மையில் ஆமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தில் இருந்த ஒரே நபர் மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார். இதைத் தொடர்ந்து, டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.