தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி முழுவதும் அதிமுக சார்பில் உற்சாகமான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக, சீனாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆயிகவுண்டம்பாளையம் பகுதியில் பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு, தனது சொந்த நிதியிலிருந்து 78 வகையான சிறப்புப் பரிசுகளைப் பொதுமக்களுக்கு வழங்கி விழாவைச் சிறப்பித்தார்.
ஜெயலலிதாவின் 78-வது வயதைக் குறிக்கும் வகையில், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, குக்கர் மற்றும் வெள்ளி அண்டா உள்ளிட்ட விலை உயர்ந்த அத்தியாவசியப் பொருட்கள் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளுக்கு வழங்கப்பட்டன. இது தவிர, விழாவில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ், உயர்தரப் போர்வைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பக்கெட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உணர்ச்சிப்பொங்கப் பேசிய எம்.எல்.ஏ. ஜெயக்குமார், வரும் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார். “தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் மற்றும் சொத்துவரியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாகத் தலா ரூ.10,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது போன்ற புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என அவர் முழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட நெசவாளர் அணி இணைச் செயலாளர் டேங்க் மணி (எ) அருணாச்சலம், ஒன்றிய விவசாயப் பிரிவு செயலாளர் கே.பி. சுந்தரம், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் நீலவேணி, ராதா மற்றும் இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் வேலு (எ) பழனிசாமி, மாணவர் அணி ஒன்றிய செயலாளர் அருள் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கிளை செயலாளர்கள் சங்கர், சரவணன், பத்மநாபன், கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார், சிவபாலன், பட்டாசு மணி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். சீனாபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த நலத்திட்ட விழா, தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் தேர்தல் களத்தில் புதிய எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.















