மும்பை :
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஆரே காலனியில் உள்ள குப்பைக் கிடங்கின் அருகே, 60 வயதுடைய ஒரு பெண்மணி பலவீனமடைந்த நிலையில் கிடந்தது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 21ஆம் தேதி, சாலையின் ஓரத்தில் குப்பைக்குவியலின் அருகே உதவிக்காக கதறிக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியை பொதுமக்கள் பார்த்து தகவலளித்ததை அடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விசாரணையில், அவருடைய பெயர் யசோதா கெய்க்வாட் என அடையாளம் காணப்பட்டது. மேலும், தோல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த யசோதா கெய்க்வாட் , தன்னை சொந்தமான பேரனே குப்பைக் கிடங்கில் விட்டுச் சென்றதாக காவல்துறையினரிடம் கண்கலங்க தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்ததற்கும் பெரும் சிரமம் ஏற்பட்டது. பல மருத்துவமனைகள் அவரது நிலையை காரணமாகக் கூறி அனுமதிக்க மறுத்ததால், மாலை 5:30 மணிக்கு தான் மருத்துவமனையில் அனுமதிக்க முடிந்தது.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் உறவினர்கள் யார்? அவரது பேரன் யார்? ஏன் இத்தகைய மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டார்? என்பதற்கான விசாரணைகளை போலீசார் தீவிரமாக நடத்தி வருகின்றனர். மேலும், அவரது புகைப்படங்களை காவல் நிலையங்களிலும், பொதுமக்கள் வசிப்பிடங்களிலும் பகிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் சமூகத்தில் வியப்பும் வருத்தமும் ஏற்படுத்தியுள்ளது.