கனடா :
கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஓரமாக, இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே தொலைபேசி வழியாக 35 நிமிடங்கள் நீண்ட உரையாடல் நடைபெற்றது. இதில் முக்கியமான அம்சமாக, இந்திய ராணுவத்தின் “ஆபரேஷன் சிந்தூர்” குறித்தும், அதனைச் சுற்றியுள்ள சர்வதேச சூழ்நிலைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
திடீர் பயண மாற்றம் காரணமாக நேரில் சந்திப்பு தவறியது
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் சூழ்நிலையின் பின்னணியில், ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருந்த ட்ரம்ப், அவசரமாக அமெரிக்காவுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், மோடி மற்றும் ட்ரம்ப் இடையேயான நேரடி சந்திப்பு நடைபெறவில்லை. இதை தொடர்ந்து, இருவரும் தொலைபேசி வழியாக பேசினர்.
மத்தியஸ்தம் குறித்து மோடி வலியுறுத்திய முக்கிய புள்ளிகள்
இந்த உரையாடலைப் பற்றிய தகவலை வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டார். அவரது விளக்கத்தின் படி, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எந்த விதமான மத்தியஸ்தத்தையும் இந்தியா ஏற்கவில்லை. பாகிஸ்தான் கெஞ்சியதாலேயே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது” என பிரதமர் மோடி தெளிவாக ட்ரம்பிடம் தெரிவித்ததாக கூறினார்.
மேலும், இந்தியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்போதும் துல்லியமாகவும், அளவிட்டும் மேற்கொள்கிறது என்றும், பயங்கரவாதத்தை இனி மறைமுகப்போராகவே காண மாட்டோம் என்றும் மோடி உறுதி அளித்ததாக தெரிவித்தார்.
அமெரிக்க அழைப்புக்கு மோடி மறுப்பு; ஆனால் QUAD மாநாட்டிற்கு அழைப்பு !
அதே நேரத்தில், ட்ரம்ப் பிரதமர் மோடியை அமெரிக்கா வர அழைத்திருந்ததாகவும், ஆனால் பல்வேறு அலுவல்களால் வர முடியாது என மோடி தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்பாராத வகையில், மோடியே ட்ரம்பை இந்தியாவில் நடைபெறவுள்ள QUAD உச்சிமாநாட்டிற்கு அழைத்ததாகவும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின் பின்னணி
ஏப்ரல் 22 ஆம் தேதி, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, மே 6-7 இரவு இந்திய ராணுவம் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக அழித்தது.
இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே நான்கு நாட்கள் கடும் மோதல்கள் நடைபெற்றன. மே 10 ஆம் தேதி இரவு, இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. இதன் பின்னணியில் அமெரிக்கா தலையிட்டது என்ற பேச்சுகளும் எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்தன.