மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள், கோவை கீரணத்தம் அருகே உள்ள ஒரு குளத்தில் உற்சாகமாகக் குளித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும், அதே சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து நேற்று காலை மூன்று காட்டு யானைகள் வெளியேறின. அவை பெரியநாயக்கன்பாளையம், இடிகரை வழியாக நகர்ந்து, கவுசிகா நதி நீர் வழித்தடங்கள் வழியாகப் பயணித்து, கோவை அருகே உள்ள கீரணத்தம் பகுதிக்கு வந்தடைந்தன.
கீரணத்தம் வந்த யானைகள், அங்குள்ள ஒரு தனியார் ஐ.டி. பார்க் அருகே உள்ள குளத்தில் நீண்ட நேரம் உற்சாகமாகக் குளியல் போட்டன.
தொழில்துறை நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த இந்தப் பகுதியில் யானைகள் நுழைந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் முதலில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாகப் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களை யானைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது குளிர்காலம் நிலவி, குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், குளத்தில் உற்சாகமாகக் குளித்த யானைகளைக் கண்டு அப்பகுதி மக்கள் சிலர், அச்சமின்றி அதனை ரசித்தனர். யானைகள் நடமாடிய கீரணத்தம் பகுதி, அதிகாலை மற்றும் காலை வேளைகளில், தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகம் பயணிக்கும் பகுதியாகும்.
அவர்கள் பணியிடங்களுக்குச் செல்லும் நேரத்தில் இந்த யானைகள் நடமாடியதால், ஏராளமான பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் சென்றவர்கள் பயம் அறியாமல் தங்கள் செல்போன்களில் யானைகளைப் புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு குட்டியுடன் மூன்று யானைகள் இதே பகுதிக்கு வந்ததாகவும், அந்தக் குட்டி யானை வளர்ந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த மூன்று யானைகளும் இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், மூன்று காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
















