100 நாள் வேலை திட்டம் தொடர்பான புதிய மத்திய மசோதாவை முன்வைத்து, அதிமுகவின் நிலைப்பாடு என்ன என முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனத்துடன் பதிலளித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் பெயரை, “விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்” என மாற்ற மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், வேலை நாட்கள் 100-இல் இருந்து 125 ஆக உயர்த்தப்படுவதுடன், மத்திய அரசின் நிதி பங்களிப்பு 60 சதவீதமாக குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் குறித்து அதிமுக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை அளித்த விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டு, சமூக வலைதளத்தில் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்தத் திட்டம் தொடர்பாக ஏற்கனவே தெளிவான விளக்கத்தை அளித்துள்ளோம். ஆனால், நாட்டில் நடக்கும் விஷயங்களை புரிந்து கொள்ளாமல், முதல்வர் ஸ்டாலின் தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என விமர்சித்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது நினைவிருக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், “முன்பு போல 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் செய்ய முடியாத நிலை உருவாகும் என்ற அச்சமே இந்த விமர்சனங்களுக்குக் காரணமா?” என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
















