மிஸ் திருநங்கை 2025 விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால், நிகழ்வின் போது உரையாற்றியதாவது, “நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன், ஆனால் இந்த நிகழ்வை போல எனக்குத் திருப்தி அளித்ததில்லை. இந்த நிகழ்ச்சிக்கு வந்தது எனக்கு மிகுந்த மன நிறைவை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
திருநங்கை சமூகத்தைப் பார்த்து உரையாற்றிய அவர், “உங்கள் சமூகத்திலிருந்து ஒருவர் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும். அதுதான் எனது ஆசை. உங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒருவர் சட்டமன்றத்தில் அமர வேண்டும். உங்கள் தேவைகளைச் சொல்லக் கூடிய ஒருவர் அவசியம் தேவை” என்றார்.
மேலும், “நீங்கள் அனைவரும் மிகவும் அழகாக உள்ளீர்கள். உடை, நகை, மேக்கப், சிகை அலங்காரம் எல்லாம் சிறப்பாக உள்ளது. ஆனால் உண்மையான அழகு உங்கள் மனதில்தான் இருக்கிறது” என மனதார பாராட்டினார். “நான் உங்கள் சகோதரனாக உங்களுடன் இருக்கிறேன். யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் – ஒரு தொலைபேசி அழைப்பில் நான் உங்கள் முன் இருப்பேன். உங்களுக்காக எதையாவது செய்வேன்” என உறுதி அளித்தார்.
இந்த உரையின்போது நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த திருநங்கைகள், விஷாலின் வார்த்தைகளால் உற்சாகமும் நெகிழ்ச்சியும் அடைந்தனர். அவரின் உணர்வுபூர்வமான உரை நிகழ்வின் சிறப்பாகும் தருணமாக அமைந்தது.