நடப்பு ஆண்டின் ஐபிஎல் முதல் பாதி போட்டிகள் முடிவடைந்து இரண்டாம் பாதியை நோக்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்ஸர் பட்டேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதுவரை விளையாடிய 7 போட்டியில் 5-ல் வெற்றி பெற்ற டெல்லி அணி, லக்னோவை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் விளையாடியது என்றால், 8 போட்டிகளில் 5ல் வென்றிருந்த லக்னோ அணியும் டெல்லியை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க களம் கண்டது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு எய்டன் மார்க்கரம், மிட்செல் மார்ஷ் தொடக்க வீரர்களாக களமிறங்க, டெல்லி அணியில் முதல் ஓவரை கேப்டன் அக்ஷர் பட்டேல் வீசினார். முதல் ஓவரில் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார் அக்ஷர். மிட்சல் ஸ்டார்க் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்ட மார்கரம், முகேஷ் குமார் வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். மார்ஷும் தன் பங்கிற்கு பவுண்டரிகளை அவ்வவ்போது விளாசியதால் பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது லக்னோ அணி. 9வது ஓவர் முடிவில் மார்ஷ் அரைசதம் விளாச 82 ரன்கள் எடுத்து மிகவும் வலுவாக காணப்பட்ட அந்த அணி 10 ஆவது ஓவரில் இருந்து சரிவை கண்டது. ஆம், சமீரா விசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் மார்கரம் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகளை விளாசி, இன்றைக்கு 200 ரன்கள் கன்பார்ம் என்று நம்பிக்கை கொடுத்தார். ஆனால், வெறும் 9 ரன்களில் ஸ்டார்க் ஓவரில் போல்ட் ஆகி நடையைக் கட்டினார் பூரன். அடுத்து வந்த அப்துல் சமத் 2 ரன்னிலும், அதே ஓவரில் மார்ஷூம் 45 ரன்னிலும் ஆட்டமிழக்க லக்னோ அணியிடம் இருந்து ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நழுவிச் சென்றது.

இம்பேக்ட் வீரராக வந்த ஆயுஷ் பதோனி பவுண்டரிகளை பறக்கவிட்டாலும், அதிரடிக்கு பெயர் போன டேவிட் மில்லர் டெஸ்ட் மேட்ச் ஆடி லக்னோ ரசிகர்களை கடுப்பேற்றினார். டெல்லி வீரர்களின் பந்துவீச்சால் ரன் வேகம் குறைந்துகொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் 150 ரன்களாவது வருமா என்ற நிலை வர.. கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி 150 ரன்களை கடக்க வைத்தார் ஆயுஷ் பதானி. 4வது பந்தில் பதோனி ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் ரிஷப் பந்த் டக் அவுட் ஆகி வெளியேறினார். லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் முகேஷ் குமார் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஸ்டார்க் 4 ஒவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் சாய்த்தார்.
160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் பொரெல், கருண் நாயர் களமிறங்கினர். இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 9 பந்துகளில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து கருண் நாயர் ஏமாற்றினார். அபிஷேக் பொரெல் உடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை நிதானமாக எடுத்துச் சென்றார் கே.எல்.ராகுல். அபிஷேக் பொரெல் அதிரடியாக பவுண்டரிகளை விளாச, ராகுல் சிங்கிள்கள் எடுத்து ஒத்துழைப்புக் கொடுத்தார். 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரவி பிஷ்னோய் வீசிய 11வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் பறந்தது. மார்கரம் வீசிய 12வது ஓவரில் ராகுல் மீண்டும் ஒரு சிக்ஸர் விளாசினார். 10வது ஓவர் வரை ஒரு சிக்ஸர் மட்டுமே விளாசப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சிக்ஸர்கள் பறந்ததால் ரன் வேகமாக உயர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பொரெல் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
பின்னர் வந்த கேப்டன் அக்ஷர் படேல் முதல் சில பந்துகளை தடுப்பாட்டம் ஆடினாலும் அதன்பிறகு சிக்ஸர்களாக பறக்கவிட்டார். கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். 18 ஆவது ஓவரின் 5வது பந்தில் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தார் ராகுல். அவர் 42 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார். கேப்டன் அக்ஷர் பட்டேல் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 விக்கெட் வீழ்த்தி அசத்திய டெல்லி பந்துவீச்சாளர் முகேஷ் குமார் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
8 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது. அந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் பிரகாசமாகியுள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளில் இரண்டில் வென்றாலே போதும்.
லக்னோ அணியைப் பொறுத்தவரை மார்கரம், மார்ஷ் ஜோடியின் சிறப்பான தொடக்கத்தால் லக்னோ அணி 200 ரன்களை கடந்து ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்டிங்கில் சொதப்பி மீண்டும் கோட்டைவிட்டது. கைக்கு வந்த பல போட்டிகளை கோட்டைவிடுவது லக்னோ அணிக்கு வழக்கமாகிவிட்டது. லக்னோ அணி தன்னுடைய 4வது தோல்வியை தழுவி பிளை ஆஃப் வாய்ப்பை மேலும் கடினமாக்கியுள்ளது.
இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். கே.எல்.ராகுல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார். டேவிட் வார்னர் 135 போட்டிகளில் 5000 ரன்கள் அடித்ததே சாதனையாக இதுவரை இருந்த நிலையில், 130 போட்டிகளில் 5000 ரன்களை கடந்து அதனை முறியடித்தார் கே.எல்.ராகுல். இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 323 ரன்களும் குவித்துள்ளார் ராகுல்.