“சாதி வேற்றுமை இல்லாத சமத்துவமே இலக்கு”: விருதுநகரில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா தலைமை வகித்த இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். இந்திய அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைகளை முன்னிறுத்தி, தீண்டாமை எனும் சமூகக் கொடுமையை வேரோடு ஒழிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான ஒருமித்தக் குரலை வெளிப்படுத்தினர்.

மாவட்ட ஆட்சியர் உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் அதனை உளமார ஏற்றுக்கொண்டனர். “தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய சுதந்திர வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமை” என்ற வாசகங்கள் முழங்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பின் மீது கொண்டுள்ள பற்றிற்கு இந்த உறுதிமொழி ஓர் அடையாளமாக விளங்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமாரமணிமாறன் மற்றும் பல அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றுச் சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்தனர்.

Exit mobile version