தற்போது நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதில் 10 அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்புத் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று அதில் 2 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த அணி, எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை 5இல் மட்டும் வென்றால் (14), மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இந்த நிலையில், சென்னை அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், மைதானங்களுக்கு ரசிகர்கள் செல்வதும் குறைந்து வருகிறது.
இந்நிலையில் சி.எஸ்.கே அணி நிச்சயம் மீண்டு வரும் என்று அந்த அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நடப்பு சீசனில் சி.எஸ்.கே. அணியின் ஆட்டத்தால் நீங்கள் அதிருப்தியாக இருப்பீர்கள். ஆனால், விளையாட்டில் இது சகஜம். இப்போது நன்றாக விளையாடவில்லை என்பது உண்மைதான். நிச்சயம் மீண்டு வருவோம். வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எங்கள் வீரர்கள் உறுதியாக உள்ளனர்” என்றார்.