அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தியிருந்தார். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு தொடங்க வேண்டிய நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார். எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்துள்ளார். அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார்.
பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தி வருகிறது. தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதை 245 சதவீதமாக்கவும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இப்படி இரு நாடுகளிடையே தீவிரமடைந்துள்ள வர்த்தகப் போரினால் சீனா, இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. முன்னதாக, வரிவிதிப்பு விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்த சீனா, இந்தியர்களுக்கு 85,000க்கும் மேற்பட்ட விசாக்களை வழங்கியுள்ளது. மேலும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பயணத்தை எளிதாக்க சீன அரசாங்கம் பல தளர்வுகளையும் அறிமுகப்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், இந்தியாவிடம் இருந்து அதிகளவு பொருட்களை இறக்குமதி செய்ய தங்கள் நாடு தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆங்கில இதழ் ஒன்றுக்கு இந்தியாவுக்கான சீன தூதர் சுஃபெய்ஹங் அளித்த பேட்டியில், “சீனாவின் நுகர்வோர் சந்தை மிகவும் பிரமாண்டமானது, அதை இந்தியா பயன்படுத்திக்கொள்ளலாம். சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை 100 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமாக உள்ளது. இதை குறைக்கும் வகையில் இந்திய பொருட்களை வாங்கிக்கொள்ள சீனா முன்வந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். இது, முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கப்படுகிறது. இந்தியாவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா தீவிரம் காட்டும் நிலையிலும், பதில் வரி விதிப்பில் நிலவும் குழப்பங்கள், இழுபறிகளுக்கு இடையில் சீனாவின் அறிவிப்பு கவனம் பெறுகிறது.