சென்னை :
நடிகர் விஜய் தலைமையிலான தமிழ் மாநில அரசியல் கட்சி தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தனது கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சி (BSP) எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு, சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் எனப்படும் இளங்கோவன், தவெக கட்சி கொடியில் இடம்பெறும் யானை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். “யானை சின்னம் எங்கள் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாகும்; இதனை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. எனவே, வேறு எந்தக் கட்சியும் இதைப் பயன்படுத்த முடியாது” என அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை ஏப்ரல் 17ம் தேதி நடைபெற்றது. அப்போது, பா.ச.க சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் பி. ஆனந்தன் வாதிடும்போது, “BSP தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. யானை சின்னம், அசாமைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் எங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தவெக கட்சி இது வரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. எனவே, யானை சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
இதனை அடுத்து நீதிபதி சக்திவேல், தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஆகியோர் ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.
எனினும், ஏப்ரல் 29 அன்று நீதிபதி விடுப்பில் இருந்ததால், பொறுப்பு நீதிபதி வழக்கை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.