இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், அரசு ஊழியர்களுக்கு 9 புதிய முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிட்டுள்ளார்.
அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்:
- ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பயன் பெறுவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு முதலே இது அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு முதலே வழங்கப்படும்.
- 1 – 1 – 25 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப் படி உயர்த்தி வழங்கப்படும் நிலையில் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 1 – 1 – 25 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்
- அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் பண்டிகைகளை குடும்பத்தினரோடு கொண்டாட பண்டிகை கால முன்பணம் 10 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
- அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் தங்கள் பணிக் காலத்தில் தேவை அடிப்படையில் திருமண உதவியாக பெண் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயாகவும், ஆண் ஊழியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இது பலமடங்கு உயர்த்தப்பட்டு அனைவருக்கும் மொத்தமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் கிராம பணியாளர்கள் உட்பட சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இது வரை வழங்கப்பட்டு வந்த 500 ரூபாய் பரிசுத் தொகை இனி 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- ஓய்வூதியதாரர்கள் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடிட பண்டிகை கால முன்பணம் 4 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த குழுவின் அறிக்கையை செப்டம்பர் 30க்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது
- அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு 9 மாத காலத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. தற்போதுள்ள விதிகளின் படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துகொள்ளப்படுவதில்லை. எனவே பெண்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. பணி உரிமைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இனி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.